எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, November 26, 2008

வனுவாட்டு - பகுதி21 -லெலெபா(Lelepa)தீவில் பயணம்


ஈவெட்(Efate) தீவின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் தீவுதான் லெலெபா தீவு. விடுதியில் காலை உணவு உண்டபின்பு, விடுதியின் வரவேற்பு அறையில் காத்திருக்க, எங்களை அழைத்துச் செல்ல வாகனம் வந்தது. அவ்வாகனம் இன்னொரு விடுதிக்கு சென்று அங்குள்ள சிலரையும் அழைத்துக் கொண்டு பயணித்தது. கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பயணத்தின் பின்பு துறைமுகத்தை(Port Havannah harbor) அடைந்தோம். அங்கே படகுகள் இரண்டு எங்களுக்காகக் காத்திருந்தன. ஒரு படகில் இரண்டாவது விடுதியில் இருந்து வந்தவர்கள் ஏறி கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள். நாங்கள் 2வது படகில் ஏறி லெலெபா தீவை நோக்கிப் பயணித்தோம். 10 நிமிடப் பயணத்தில் லெலெபா தீவை அடைந்தோம்.

கீழே உள்ள படத்தில் இருப்பவர் படகோட்டியாகவும் சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்தார்.

கீழே உள்ள படத்தில் படகினைத்தள்ளுபவர் படகோட்டியின் மருமகன்.


இத்தீவில் இரண்டு கிராமங்கள் உள்ளது. அதனால் இரண்டு கிராமத்தலைவர்கள்.இத்தீவிற்கு நாங்கள் சென்றசமையத்தில் ஒரு கிராமத்தலைவர் இறந்து விட்டதினால், இத்தீவில் உள்ள மக்களில் பலர் இவரது வீட்டில் அஞ்சலி செய்யப் போய் விட்டார்கள். இவருக்குப் பிறகு இவரது மகன், பிறகு கிராமத்தலைவராக உள்ளார்.

இத்தீவை அடைந்ததும் ஒரு கரையில் இருந்து மரங்கள் உள்ள ஒற்றை அடிப்பாதைகளின் ஊடாக இன்னொரு கரைக்கு எங்களை சுற்றுலா வழிகாட்டி கூட்டிக் கொண்டு சென்றார். அவருடைய மருமகன் படகில் மறுகரையை நோக்கிச் சென்றார். நாங்கள் இறங்கிய கரையில் இருந்து ஒற்றையடிப்பாதையினூடாகச் செல்லும் போது அங்கு காணப்பட்ட மரங்கள், வேர்களினை மூலிகைகளாக, மருந்துகளாக அம்மக்கள் உபயோகிப்பது பற்றி சுற்றுலா வழிகாட்டி எங்களுக்கு விளங்கப்படுத்தினார். ஒரு மரப் பொந்தினைக் காட்டி அப்பொந்தில் தேங்காய் நண்டு இருக்கும் என்றும் சொன்னார். ஏன் தேவையில்லாமல் நண்டிடம் கடிவாங்குவது என்று நினைத்து அப்பொந்துப்பக்கம் செல்வதை நான் தவிர்த்தேன்.

நாங்கள் நடந்து அத்தீவின் இன்னுமொரு கரையினை அடைந்தோம். அங்கே சுற்றுலா வழிகாட்டியின் மருமகன் படகில் வந்திருப்பதைக் கண்டோம். சுற்றுலா வழிகாட்டி அங்கே எங்களின் மதிய உணவுக்காகச் சமைக்கத்தொடங்கினார்.அக்கரையில் உள்ள கொட்டில்களில் சிலர் இளைப்பாற சிலர் கடலில் குளிக்கச் சென்றார்கள்.



No comments: