எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, December 04, 2008

வனுவாட்டு - பகுதி23 -கடலினுள் இருந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள்

படகோட்டி(சுற்றுலா வழிகாட்டி) மீன்கள் அதிகமாக உள்ள இடத்தில் படகை நிற்ப்பாட்டினார். நீச்சல் தெரிந்தவர்கள் நீரினுள் சென்று கடல்வளத்தினைப்பார்க்க, சுழியோடிகள் அணியும் கண்ணாடிகளை எங்களுக்கு படகோட்டி தந்தார். எனினும் கடல் அலைகள் அற்று தெளிவாக உள்ளதினால் படகில் இருந்தே கடலினுள் மீன்களினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. படகோட்டி பாண்(வெதுப்பி)துண்டுகளை தர நாங்கள், அவற்றைக் கடலில் வீசினோம். பாண் துண்டுகளை நோக்கி மீன்கள் வந்தன.





வழிகாட்டி படகில் இருந்தவாறே தனது கைகளினால் ஒரு மீனைப் பிடித்துக்காட்டி, பிறகு அம்மீனைக் கடலில் இட்டார்.

படகு லெலெபாதீவின் இன்னுமொரு கரையினை நோக்கிச் சென்றது.

கடற்கரையில் கோழிகள்,குச்சுகளினைக் காணக்கூடியதாக இருந்தது.



அக்கரையில் உள்ள ஒரு வீட்டினை அடைந்ததும், அங்கே எங்களுக்கு விசுக்கோத்துடன் தேனீரும் தந்தார்கள். அவ்வீட்டில் உள்ளோர் ஒலைகளினால் வேயப்பட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்கள். குறைந்தது ஒரு பொருளாவது வாங்கி அவர்களுக்கு உதவுமாறு சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். பொருட்களும் மிகவும் மலிவு விலையில் இருந்தன.

அக்கிராமத்தினைவிட்டு வெளியே வந்து, படகில் இத்தீவினைச் சுற்றி வரும் போது வழிகாட்டி, எங்களுக்கு நீரினுள் பார்க்கக்கூடிய கண்ணாடியை அணியத் தந்து நீருக்குள் பார்க்கச் சொன்னார். பார்க்கும்போது அங்கே நீருக்கடியில் உடைந்த நிலையில் ஒரு விமானத்தின் பாகங்கள் தெரிந்தன. 2ம் உலகப் போரின் போது அங்கே விழுந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள் தான் அவை என்று வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். அந்த விழுந்து உடைந்த விமானத்தின் பாகங்களினை கடலில் இருந்து எடுக்கும் செலவு அந்தக்காலத்தில் அதிகம் என்பதினால், உடைந்தபாகங்களினை வெளியே எடுக்க அமெரிக்கர்கள் அக்காலத்தில் முயற்சி செய்து பார்க்கவில்லை.

வழிகாட்டி எங்களை ஈவெட் தீவின் அருகில் படகை நிற்பாட்ட, எங்களை ஏற்றி வந்த வாகனம் எங்களுக்காக அங்கே நின்றது. மீன்பிடிக்கப் போனவர்களும் மீன் கிடைக்காத ஏமாற்றத்துடன் அவ்வாகனத்தில் இருந்தார்கள்.

ஈவேட் தீவுக்கும் லெலெபா தீவுக்கும் இடையில் பயணிகள் படகுச்சேவையினைக் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

காலை 9 மணிக்கு லெலெபாத்தீவுக்கு சுற்றுலா சென்று மாலை 6மணிக்கு நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தேன். நகரத்துக்கு சென்று அன்றைய இரவு உணவினை சீனர்களின் உணவகமொன்றில் உண்டேன். ஒருவருக்கு தரும் அவ்வுணவு இருவர் சாப்பிடக்கூடியதாகவும், மிகவும் உரூசியாகவும் இருந்தது.

Tuesday, December 02, 2008

வனுவாட்டு - பகுதி22 -குகைக்குள் பயணம்

லெலெபா தீவில் எங்களைக் கூட்டி வந்த சுற்றுலா வழிகாட்டி மதிய உணவுக்காகச் சமைக்கத் தொடங்க நான் கடலில் குளிக்கச்சென்றேன்.குளிக்கும் போது கடலின் அடியில் இருப்பதினைப்பார்க்க சுழியோடுபவர் அணியும் கண்ணாடியினை தந்தார்கள். அதனூடாக கடலின் அடியினைப் பார்த்தேன்.

அப்பொழுது கடலில் ஒரே ஆரவாரம் கேட்டது. ஒருபடகில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் English survivors, French survivors னைப் பார்த்திருப்போம். படகில் திரிந்தவர்கள் French Survivors. அவர்களினை இத்தீவில் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் கொஞ்சக்காலம் வெளித் தொடர்பற்று இத்தீவில் சீவிக்க வேண்டும்.கனகாலம் இருப்பவருக்கு அதிக பணம் கிடைக்கும்.

சமைத்து முடிந்ததும் சுற்றுலா வழிகாட்டி, எங்களுக்கு அசைவ,சைவ உணவுகளுடன் சோற்றினையும் பரிமாறினார். அதன் பின்பு பழங்களும் தந்தார். மீன்பிடிக்க படகில் சென்றவர்களைப் பற்றி சென்ற பதிவில் உங்களுக்கு சொல்லியிருந்தேன். அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே ஏமாற்றத்துடன் கரைக்கு வந்து உணவு உண்டதும் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் இத்தீவில் சுற்றுலா பார்க்க எங்களுடன் கலந்து கொள்ளவில்லை. மீன் பிடிக்கவே வந்தார்கள்.
நாங்கள் கிட்டத்தட்ட 3 மணித்தியாலம் அக்கரையில் இருந்து குளித்து இளைப்பாறியபின்பு( உணவு சமைக்க, அவ்விடத்தைச் சுத்தம் செய்ய சுற்றுலா வழிகாட்டிக்கு 3 மணித்தியாலம் எடுத்தது)படகின் மூலம் அத்தீவின் இன்னொரு கறைக்கு வந்தோம்.

அங்கே 5 நிமிடங்கள் மரங்களின் ஊடாக நடக்க குகை ஒன்றினை அடைந்தோம்.

குகைக்குள் செல்லச் செல்ல ஒரே இருட்டாக இருந்தது.

சுற்றுலா வழிகாட்டி கொண்டு வந்த மெழுகுதிரி வெளிச்சத்தின் உதவியுடன்,போகும் வழியில் நிலத்தில் இருந்த மெழுகுதிரிகளையும் வெளிச்சமாக்கி அவ் வெளிச்சத்தின் உதவியுடன் நடந்து சென்றோம்.

குகைக்குள் செல்லச் செல்ல உடலில் இருந்து வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. போகப்போக குகையின் உயரம் மிகவும் குறைவாகவும் பாதை ஒடுக்கமாகவும் இருந்தது.

இக்குகையில் சிலர் தங்கியிருந்த அடையாளங்கள் இருந்தன. சுற்றுலா வழிகாட்டி, இரவில் இக்குகையில் 'French Survivors' தங்கியிருந்தார்கள் என்று சொன்னார்.

படத்தில் தெரியும் கை அடையாளம் இத்தீவில் வாழ்ந்த மூதாதையர்களின் கை அடையாளம் என்று சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார்.

குகைக்குள் செல்லசெல்ல பாதையின் உயரம் குறையத் தொடங்கியது. இதனால் நாங்கள் தவழ்ந்து தான் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அத்துடன் பாதையும் வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் பாதையின் முடிவில் சிறு துவாரத்தின் ஊடாக வெளிச்சம் தெரிந்தவுடன் மீண்டும் வந்த பாதை வழியாக, ஏற்றி வைத்த வெளிச்சத்தினை அணைத்துக் கொண்டு திரும்பி நடந்தோம். குகையினை விட்டு வந்ததும் அடர் மரங்களின் ஊடாக நடந்து வந்து மீண்டும் படகில் ஏறி, இத்தீவினைச் சுற்றி வரும் போது இன்னுமொரு குகையினையும் கண்டோம்.

அக்குகையின் உள்ளேயும் சென்று பார்க்கலாம். ஆனால் முதல் குகை போன்று இதனுள் நடப்பதற்கு ஏற்ற இலகுவான பாதை அங்கு இருக்கவில்லை.