எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, September 04, 2008

வனுவாட்டு - பகுதி16 -Beachcomber

மதியம் 1 மணி ஆக எல்லோருக்கும் நல்ல பசி. எங்கள் வாகனம் Beachcomber என்ற இடத்தை அடைந்தது. ஈவெட் தீவைச்சுற்றி ஒருநாள் பயணம் என்ற இச்சுற்றுலாவை நடாத்தும் அவுஸ்திரெலியாக்காரரின் சொந்தமான விடுதியான Beachcomber lodgeம் அங்குதான் இருந்தது. நாங்கள் உண்பதற்கு உணவு அங்கே தயார் செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் அங்கே செல்ல, வரவேற்புக் கீதங்களினை இசைக்கருவிகளின் உதவியுடன் பாடி எங்களை வரவேற்றார்கள்.

எல்லோருக்கும் பசித்திருந்தாலும், அங்கே இருந்த மூன்றுவகை வெப்பனிலையில் உள்ள நீர்நிலைகளினைக் கண்டதும், பசியினை மறந்து அதில் நீந்தச் சென்றோம்.




குளித்துவிட்டு மதிய உணவு உண்ணச்சென்றோம். மீன், இறால் உட்பட பலவிதமான கடல் உணவுகளுடன், மரக்கறி உணவுகள், கோழிக்கால்கள், மாட்டிறச்சி என சோற்றுடன் உணவுகள் அங்கே இருந்தன. இதை விட இத்தாலி நாட்டின் உணவுகளும் அங்கே இருந்தன. விருப்பமானவற்றினை உண்டபின்பு, வாழை இலையில் இருந்த சிறு துண்டுகளாக்கப்பட்ட வெவ்வேறு விதமான பழங்களினை உண்டோம். அதன்பிறகு சுவையான குளிர்களி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. சாப்பிட்டதும் சிலர் மீண்டும் நீர் நிலைகளில் நீந்தச்சென்றார்கள். சிலர் கடலில் சிறு படகில் சென்றார்கள். நான் கடலில் முருகைக்கல் போன்ற கூரிய கற்கள் இருந்ததினால், அவதானித்து கவனமாகச் சென்று கடலில் குளித்தேன்.


கடற்கரையில் பல உயிர் உள்ள சோகிகளும், சங்குகளும் ஊர்ந்து திரிவதினைக் காணக்கூடியதாக இருந்தது.

குளித்தபின்பு எங்கள் வாகன ஓட்டி, வனுவாட்டு மக்கள் விரும்பி உண்ணும் தேங்காய் நண்டினைப்(Coconut Crabs) பற்றி விளக்கம் தந்தார்.

நண்டின் பின்பக்கத்தில் பிடித்துத் தூக்க வேண்டும். இந்நண்டினைத் தூக்கி பாருங்கள் என்று எங்களிடம் அவர் சொல்ல, கடித்துவிடும் என்ற பயத்தில் நாங்கள் ஒருவரும் நண்டுக்குக் கிட்டச் செல்லவில்லை.

வனுவாட்டில் பல இடங்களில் மனித உறுவில் செய்யப்பட்ட கறுத்த நிறமுடைய, தலைப்பகுதி பெரிதாகவுள்ள ஒரே மாதிரியான சிலைகளைக் கண்டேன்.இச்சிலையினை Beachcomberவிலும் கண்டேன். இச்சிலைகள் முன்பு வாழ்ந்த கிராமத் தலைவர்களினைக் குறிக்கும் என அறிந்தேன்.

2 comments:

கானா பிரபா said...

thodarnthu vaasikkiren, arumai
thodaraddum

Aravinthan said...

நன்றிகள் பிரபா. உங்களின் பயணக்கட்டுரைகளை வாசித்துத்தான் நானும் எனது அனுபவங்களை எழுத ஆரம்பித்தேன்.